ஆரணி சிவன் கோவில் தேர் சரிவு: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்
திருவண்ணாமலை: ஆரணியில் கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் அச்சு முறிந்து சாய்ந்ததில் 5 பேர் பலியாகினர், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 40 அடி உயரம், 15 அடி அகலம், 15 டன் எடை கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் மணிக்கூண்டு அருகே சென்று கொண்டிருந்தபோது அச்சு முறிந்து தேர் முன்பக்கமாக சாய்ந்தது. தேரின் பக்கவாட்டில் உள்ள 4 சக்கரங்களும் தனித்தனியாக கழன்றன. தேர் முன்பக்கமாக சாய்ந்ததில் வடம் பிடித்து இழுத்ததவர்களும், தேருக்கு கட்டை போட்டவர்களும் தேருக்குள் சிக்கிக் கொண்டனர். தேருக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.
உடனே கிரேன் கொண்டு வரப்பட்டு சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு தேர் தூக்கப்பட்டது. இதில் ஆரணி அருணகிரி தெருவைச் சேர்ந்த கோவில் பக்த சங்க பொருளாளர் சம்பத் என்பவரது மகன் சபரி (வயது 35), ஆரணி ரோட்டரி சங்க செயலாளர் ஜவகர் (35), தேருக்கு கட்டை போட்ட எஸ்.வி. நகரத்தைச் சேர்ந்த செங்கல்வராயன் (60), அவரது மகன் ராமதாஸ் (35), சரவணன் (34), ஆரணியைச் சேர்ந்த மணி (37), செந்தில்வேல் (36), ஆறுமுகம் (32), கீர்த்தி (25), ஆரணி கொசப்பாளையத்தைச் சேர்ந்த ராமு (60), படவேடு கோவில் அய்யர் கணேசன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் ஜவகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சபரி, செங்கல்வராயன், ராமதாஸ், சரவணன் ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் மணி, ஆறுமுகம், செந்தில்வேல், ராமு, கீர்த்தி, கணேசன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000ம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.