வருகிறது வறுத்தெடுக்கும் 'கத்திரி'...24 நாட்கள் வெயில் வெளுத்தெடுக்குமாம்!
சென்னை: மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. அன்றிலிருந்து 24 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும், அக்னி அணல் பரப்பும், கடும் வெயில் மண்டையைப் பிளக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல ஏற்கனவே தமிழகத்தை கடும் வெயில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. கத்திரி வெயிலுக்கு கட்டியங் கூறுவது போல வெயில் அடித்து வருவதால் மக்கள் பெரும் களேபரமாகியுள்ளனர்.
இப்போதே மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி ஓட ஆரம்பித்து விட்டது. எங்கு போனாலும் வெயில், வெயில், வெயில்தான். கடற்கரைக்குப் போனால் கூட வெம்மையின் தாக்கம் குறைவாக இல்லை.
வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் டூவீலர்களில் போகும் பெண்களைப் பார்த்தால் தலிபான் கூட்டத்தைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அந்த அளவுக்கு துப்பட்டாவால் தங்களது முகம், கைகளை மூடியபடி அவர்கள் விர்ரென்று பறக்கிறார்கள். ஜமுக்காளம், போர்வையைக் கொண்டு சுற்றிக் கொள்ளாத குறைதான்.
இப்போதே இந்த அளவுக்கு வெயில் கரடுமுரடாக இருக்கும் நிலையில், வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல கத்திரி வெயில் வரப் போவதை தெரிவித்து விட்டது வானிலை மையம். மே 4ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கத்திரி வெயில் தொடங்குகிறதாம். 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் காலத்தில் அனல் காற்று கதிகலங்க வைக்கும். வெயில் மிகக் கடுமையாக இருக்கும். கடந்த ஆண்டு 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இந்த ஆண்டும் அதே அளவில்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கத்திரி வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
சூரியனில் இருந்து பூமியை நோக்கி சிற்றலை, நீண்ட அலை என்று 2 அலை கதிர்கள் வருகின்றன. சூரியனில் இருந்து வரும் சிற்றலை காரணமாக பூமி அதிகம் வெப்பம் அடைவதில்லை. ஆனால் தாழ்வான பகுதிகளை சூரியனில் இருந்து வரும் நீண்ட அலை கதிர்கள் தாக்குகின்றன. இதனால் தாழ்வான பகுதிகள் அதிக வெப்பமாக இருக்கின்றன.
தமிழகத்தில் இந்த மாதம் வெயில் சராசரியாக 97.52 டிகிரியாக இருக்கும். ஜூன் மாதம் 97.88 டிகிரி யாகவும், ஜூலை மாதம் 98.06 டிகிரியாகவும் இது அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம் 93.02 டிகிரியாக இது குறையும். இந்த 4 மாதங்களில் காலை 10.30 மணிக்கு முன்பாக கடல் காற்று வீசினால் அல்லது இடியுடன் மழை பெய்தால் வெயில் அளவு இயல்பு நிலையில் இருக்கும். மாறாக, கடல் காற்று வீசுவது லேட் ஆனால் வெப்பம் அதிகரிக்கும் என்றார்.
எனவே, காலையிலேயே கடல் காற்று வீசவும், நல்ல மழை பெய்யவும் இப்போதே அனைவரும் வேண்டிக் கொள்ள ஆரம்பிப்போம்...