போலி போலீஸ் அதிகாரி விஜயபானுவால் வீழ்த்தப்பட்ட பெண்கள்- பறிக்கப்பட்ட நகைகள் மீட்பு
சென்னை: போலி ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து சிக்கிய விஜயபானு மேலும் சில பெண்களை ஏமாற்றி பணம் பறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து சென்னை புழல் சிறை வார்டன்களை வளைத்துப் போட்டவர் விஜயபானு. சிறையில் நடக்கும் ஊழலை வெளிப்படுத்த தம்மை மத்திய அரசு நியமித்துள்ளதாகவும் தாம் போலியாக கைதியாக சிறையில் இருப்பதாகவும் கூறி நம்ப வைத்தார் விஜயபானு. அவரை நம்பி பெண் சிறைவர்டன்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்திருந்தனர்.
பினன்ர் சிக்கிய விஜயபானு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கூடுதல் விசாரணை நடத்துவதற்காக அவர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தாம் எப்படியெல்லாம் ஒவ்வொருவரையும் ஏமாற்றினேன் என்பதை கதை கதையாக விஜயபானு கொட்டியிருக்கிறார். போலீஸ் காவலலில் கூறியபடி 3 பெண்களிடம் தாம் பறித்த 50 பவுன் நகைகளை எங்கே அடகு வைத்திருக்கிறேன் என்பதையும் விஜயபானு கூறியுள்ளார். அந்தப் பெண்களிடமும் முறைப்படி போலீசார் புகார் வாங்கியுள்ளனர். மேலும் அடகுக் கடைகளுக்கு கூட்டிச் சென்று அவர் வைத்த நகைகளை போலீசார் மீட்டனர்.
இதேபோல் சுமார் 100 பவுன் நகைகளுக்கு மேல் விஜயபானு மோசடி செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதனால் அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.