20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9ம் தேதி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்
சேலம்: வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.
இது குறித்து அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கு.பாலசுப்பிரமணியம் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள புதிய பென்ஷன் திட்ட மசோதாவை மத்திய அரசும், அனைத்து அரசியல் கட்சியினரும் சேர்ந்து வாபஸ் பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக், ரேஷன் கடை, கூட்டுறவு மற்றும் மேல் நிலை நீர் தேக்க தொட்டி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி அரசு பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத பேராட்டம் நடைபெறும் என்றார்.