பயணிகள் கப்பலை கடத்தி பயணிகளை கொல்ல அல்-கொய்தா சதி: ஆபாச வீடியோவில் சிக்கிய தகவல்கள்!
இந்தத் திட்டம் தொடர்பான விவரத்தை ஒரு ஆபாச படத்தின் வீடியோவுடன் 'பிட்' படம் போல இணைத்து, மறைத்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர் அல் கொய்தா தீவிரவாதிகள்.
வழக்கமாக 'பிட்' படங்களில் இந்த டெக்னிக் பயன்படுத்தப்படும். ஒரு அழுகைப் படத்தில் திடீரென விதவிதமான ஆபாச காட்சிகள் வந்துவிட்டுப் போகும். வெளியுலகை ஏமாற்ற நல்ல படம் ஓடுவது போல போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் தான் அந்த மாதிரி தியேட்டருக்குப் போய் 'படத்தை' பார்த்துவிட்டு வருவார்கள்.
அல் கொய்தாவின் திட்டங்கள் ஆன்லைனிலும் வீடியோ சிடிக்களிலும் மெமரி ஸ்டிக்களிலும் உலா வருவது வழக்கம். இதை உளவுப் பிரிவினர் அவ்வப்போது கண்டுபிடித்து சதித் திட்டங்களை முறியடித்தும் வருகின்றனர்.
பெரும்பாலும் பாதுகாப்புப் படையினரிடம் தீவிரவாதிகள் சிக்கும்போது அவர்களது வீடுகளில் நடத்தப்படும் ரெய்டுகளில் சதித் திட்டங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகள், சிடிக்கள் உள்ளிட்டவை சிக்குவது வழக்கம்.
ஆனால், அதையும் திசை திருப்ப இந்த சதித் திட்டத்தை ஆபாச வீடியோக்களில் சேர்த்து மறைக்க அல் கொய்தா தீவிரவாதிகள் முயன்றுள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வந்து பிடிபட்ட ஆஸிதிரியாவைச் சேர்ந்த மக்சூத் லோதின் என்ற தீவிரவாதியிடம் சிக்கிய சிடியில் ஆபாச வீடியோவே இருந்தது. முதலில் இதை ஆபாச வீடியோ என நினைத்த உளவுப் பிரிவினர் தொடர்ந்து முழு வீடியோவையும் பார்த்தபோது அதில் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்ட டேட்டா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீடியோ பைலை அக்குவேறாக பிரித்து decrypt செய்து ஆராய்ந்தபோது தான் அதில் பயணிகள் கப்பல்களை கடத்தும் திட்டம் குறித்த விவரங்களும் இருந்தது தெரியவந்தது.
இந்தத் திட்டத்தின்படி, 10 தீவிரவாதிகள் பயணிகள் கப்பலைக் கடத்துவது. பின்னர் பயணிகளுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு தரப்படும் சிவப்பு நிற உடை போன்ற உடைகளை அணிவிப்பது, பின்னர் பயணிகளை ஒருவர் பின் ஒருவராக சுட்டு வீழ்த்துவது, இதை ஆன் லைனில் நேரடியாக ஒளிபரப்புவது என்று சதி தீட்டப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட மும்பை தாக்குதலைப் போல இந்தத் தாக்குதலை நடத்துவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர்.
இதையடுத்து லோதினும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருந்த அவரது கூட்டாளியான யூசுப் ஓகேக் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களது தலைவனாக ரஷீத் ரெளப் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.