நாடாளுமன்ற புறக்கணிப்பைக் கைவிட்டார் சூகி- எம்.பியாக இன்று பதவியேற்றார்!
மியான்மரில் தொடர்ந்து ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகிறது. இதற்காக வீட்டுச் சிறையில் பல ஆண்டுகாலம் வைக்கப்பட்டவர் சூகி. இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டில் மெதுமெதுவாக ஜனநாயக ஆட்சிக்கான வழி வகுக்கப்பட்டது.
கடந்த மாதம் அந்நாட்டின் 45 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் சூகி உப்டட அவரது கட்சி போட்டியிட்ட 44 இடங்களில் வென்றது உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இருப்பினும் தற்போதைய ராணுவ அதிகாரிகள் இடம்பெற்றிருக்கும் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது கட்சியினருடன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்காமல் புறக்கணிப்பு செய்து வந்தார்.
பல்வேறு நாட்டுத் தலைவர்களும் சூகி தங்களது புறக்கணிப்பைக் கைவிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்நாட்டுக்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கி மூனும் ஆங்சான்சூகியை நேரில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற புறக்கணிப்பைக் கைவிடுவதாக சூகி கட்சி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்துக்கு சென்ற ஆங்சான் சூகியும் அவரது கட்சி எம்.பிக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.