பீ.பி.ஓ. துறையில் அதிக வருவாய் ஈட்டுவதில் இந்தியாவுக்கே முதலிடம்
டெல்லி: பீ.பி.ஓ. எனப்படும் பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் சேவையில் அதிக வருவாய் ஈட்டி வருவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
2011-12-ஆம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பீ.பி.ஓ. சேவை வாயிலாக 1,590 கோடி டாலர் (ரூ.82,680 கோடி) ஈட்டி உள்ளனர். இது, முந்தைய 2010-11-ஆம் நிதி ஆண்டின் வருவாயுடன் (1,420 கோடி டாலர்) ஒப்பிடும்போது 12 விழுக்காடு அதிகமாக உள்ளது.
பீ.பி.ஓ. துறையில் இந்திய நிறுவனங்களால் குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்குகிறது, இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின் காப்பீடு, மருத்துவம், அறிவுசார் தொழில், சட்டம் போன்ற பல்வேறு சேவைகளை இந்திய நிறுவனங்கள் வாயிலாக நிறைவேற்றி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் மந்தநிலை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இந்திய ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறை ஓர் உந்துசக்தியாக திகழ்கிறது.
2011-12-ஆம் ஆண்டில் இந்திய ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் 10,000 கோடி டாலராக (ரூ.5.20 லட்சம் கோடி) உயர்ந்து இருக்கும் என நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காடு என்றார் அவர்.