உள்துறை அமைச்சகம் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது: டெல்லி மாநாட்டில் ஜெயலலிதா கடும் தாக்கு
டெல்லியில் நடைபெற்ற தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:
உள்துறை அமைச்சகத்தின் காழ்ப்புணர்ச்சி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மத்திய அரசு தன்னிச்சையாகவே அறிவித்தது. இந்த அமைப்பில் மத்திய உளவுத்துறையான ஐ.பி.யின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. இதனால் மற்ற புலனாய்வு அமைப்புகளுடன் மோதல் போக்குதான் ஏற்படும்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து மாநில அரசுகளுடன் உள்துறை அமைச்சகம் கலந்து ஆலோசிக்கவில்லை. இதன் உத்தரவு நகலைக் கூட தமிழக அரசுக்கு அனுப்பாமல் அவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. ஒடிசா முதல்வ நவீன்பட்நாயக் வைத்திருந்த நகலின் மூலமே எங்களுக்கு இந்த விஷயமே தெரியவந்தது. இது உள்துறை அமைச்சகத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
உளவு அமைப்பிடம் ஒருங்கிணைப்பு இல்லை
தீவிரவாத தடுப்பு விஷயத்தில் அனைத்து உளவு அமைப்புகளும் அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். ஆனால் நமது உளவு அமைப்புகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பதே உண்மை. எல்லைப் பகுதியில் போதிய தகவல்களைப் பெறாததால் கார்கில் போர் நிகழ்ந்தது. பொதுமக்களிடம் போதுமான தகவல்களை சேகரிக்க முடியாமல் போனதால்தான் 2008-ல் மும்பை தாக்குதல் நடந்தது.
பயனற்ற என்.சி.டி.சி.
தற்போதைய வடிவத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டால் அது தீவிரவாதிகளுக்குத்தான் சாதகமாக அமையும். எல்லைகளி, கடலோரங்களில் மாநில அரசுகளுடன் தகவல் பரிமாற்றம் அவசியமானதாகும். தீவிரவாத செயல் தொடர்பாக உள்ளூர் மக்கள் தகவல் தந்தால் அவர்களுக்கு தாராளமாக சன்மானம் வழங்கப்பட வேண்டும். அதற்கு மாநிலப் புலனாய்வு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக மாநில காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பது என்பது தீவிரவாதத்துக்கு துணை போவதாகிவிடும்.
முதல்வர்கள் குழு
எனவே தற்போதைய வடிவத்திலான தேசிய தீவிரவாத் தடுப்பு மையத்தை நிறுத்தி வைக்கவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான யுக்திகளை வரையறுக்க முதலமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதலில் அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.