ஆசிரியையைத் தாக்கிய போலீஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!
தர்மபுரி: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பப் படிவம் வாங்கும் போது போலீஸ் அதிகாரிகளுக்கும் விண்ணப்பம் வாங்க வந்தவர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது, ஒரு ஆசிரியை நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய போலீஸ் அதிகாரி சந்தான கிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி வழங்கப்பட்டது. ஒரே நாளில் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.
விண்ணப்பங்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் அதிகளவில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விண்ணப்பம் கைவசம் இல்லை, விற்று தீர்ந்து விட்டது. எனவே மறுநாள் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கிடையே சிலர் விண்ணப்பங்களை கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. இதனால் கல்வி அதிகாரிகளுக்கும், பட்டதாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பட்டதாரிகள் விண்ணப்பம் வழங்கும் மையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தர்மபுரி நகர டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் மறியலை கைவிட்டு கல்வி அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார். அதற்கு ஒரு ஆசிரியை வர முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுக்கும், அந்த ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த ஆசிரியையின் நெஞ்சில் கைவைத்து பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர். அச்சமயத்தில் அங்கு வந்த ஆசிரியையின் கணவரை டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் தாக்கியதோடு, காவல் நிலையத்துக்கு வரவழைத்து வழக்கு போடுவதாக மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
தனது கணவரை மீட்க வந்த ஆசிரியையும் டி.எஸ்.பி. கழுத்தை பிடித்து வெளியேற்றியுள்ளார். டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் ஆசிரியர் தம்பதி மீது தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டசபையிலும் இது எதிரொலித்தது. ஆனாலும், ஒன்றுமே நடக்காதது போல துறை அமைச்சரும் முதல்வரும் கூறினர்.
ஆனால் பின்னர் டி.எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அதன்படி தரும்புரி டி.எஸ்.பி.யாக பதவி வகித்து வந்த சந்தானபாண்டியன் கிருஷ்ணகிரிக்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.