கண்ணகி கோயிலில் நாளை சித்திரை பெளர்ணமி திருவிழா - பக்தர்கள் பாதயாத்திரை
கூடலூர்: தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கல்தேவி கண்ணகி கோயிலில் சித்திரை பெளர்ணமி திருவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மங்களா தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி என்னும் இடத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கண்ணகி
பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் தமது கணவன் கோவலனுக்கு மரண தண்டனை அளித்துக் கொன்றதால் மதுரையை எரித்த கண்ணகி 14 நாட்கள் நடந்தே சென்று திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக கூறப்படுகிறது. கண்ணகி தேவலோகம் சென்ற இடத்தில்தான் கண்ணகி கோயில் இருக்கிறது.
தற்போது இது கேரள மாநில எல்லைக்குள் இருக்கிறது. கண்ணகி தேவி கோயில் தங்களுக்கே சொந்தம் என்று கேரளம் உரிமை கோருவதால் கூடுதல் கெடுபிடிகளுடனேயே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெளர்ணமி திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கூடுதல் பாதுகாப்பு
கண்ணகி கோயிலுக்குச் செல்ல தமிழக வனப்பகுதி வழியே முறையான சாலை அமைக்கப்படவில்லை. இதனால் கேரள அரசின் அனுமதி பெற்று பல கெடுபிடிகளுக்கு மத்தியில் கண்ணகி கோட்டம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இருப்பினும் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் தொடர்ந்து கண்ணகி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
பளியங்குடியிலிருந்து மலைகளுக்கு நடுவே நடந்து செல்வோரும் உண்டு. ஜீப் மற்றும் டாக்சிகளில் சென்றும் கண்ணகியை வழிபட்டு வருகின்றனர். ஜீப்பில் பயணம் மேற்கொள்ள ரூ50ம் டாக்சியில் செல்ல ரூ700ம் வசூலிக்கப்படுகிறது/
தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் இரு மாநிலங்களிடையே பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் நாளை கண்ணகி கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் இருதரப்பிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.