3 நாள் பயணமாக இந்தியா வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி
கொல்கத்தா: இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று கொல்கத்தா வந்தடைந்தார்.
கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசும் ஹிலாரி, சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தக் கூடும்.
அதன் பின்னர் டெல்லி செல்லும் ஹிலாரி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசுகிறார்.
இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின்போது ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகள் தொடர்பான விவகாரங்களை விவாதிப்பதுடன் சீனாவுடனான உறவுநிலை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக தென்சீனக் கடல் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற உள்ள இந்தியா- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.