பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரையில் நடந்து வரும் சித்திரைத் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காணக் கிளம்பும் அண்ணன் அழகர், மதுரை வருவதற்கு தாமதமாகிறது. இதனால் தங்கையின் திருமணம் முன்கூட்டியே முடிந்து விடுகிறது. இதனால்கோபமடையும் அண்ணன் அழகர், மதுரைக்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிப் போய் விடுவதாக ஐதீகம். இதைத்தான் வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இன்று வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கினார். முன்னதாக நேற்று மதுரை வந்த அழகருக்கு வழியெங்கும் மக்கள் தடபுடலான வரவேற்பை அளித்து அவரது அருளைப் பெற்றனர்.
இதையடுத்து இன்று காலையில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் கோலத்தில் அழகர் பெருமான் வைகை ஆற்றில் இறங்கினார். தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டில் ஜொலி ஜொலித்த அழகரை, பக்தர்கள் கோவிந்தா கோஷம் போட்டு வணங்கினர். தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அவரது அருளைப் பெற்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு பரவசம் அடைந்தனர். அழகர் திருவிழாவுக்காக வைகை ஆற்றில் தண்ணீர்திறந்து விடப்பட்டிருந்தது. மேலும் மதுரையிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த முறை ஆற்றில் தண்ணீர் வரத்து சீராக இருந்தது.
ஆற்றில் இறங்கும் வைபவம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அழகர் பெருமான் ராமராயர் மண்டபத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சில் இறங்கினர்.
இன்று மாலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் கிளம்பிச் செல்கிறார். நாளை ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி விடிய விடிய கோலாகலமாக நடைபெறுகிறது.