100 ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் 'சிக்' லீவ்!: 10 பைலட்டுகள் பணி நீக்கம்!!
ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக 100 பைலட்டுகள் உடம்பு சரியில்லை என்று கூறி இன்று பணிக்கு வரவில்லை. இதனால் 5 சர்வதே சேவைகளை ரத்து செய்ய நேரிட்டது.
இதையடுத்து மத்திய அரசு கடும் கோபமடைந்துள்ளது. இதையடுத்து இன்று பைலட்டுகள் மீது அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு குதித்துள்ளது. முதல் வேலையாக இந்திய பைலட்டுகள் சங்கத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் உடல் நலம் சரியில்லை என்று கூறி பணிக்கு வராத விமானிகளின் வீடுகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி உண்மையிலேயே அவர்களுக்கு உடம்பு சரியில்லையா என்பதை ஆராயுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜீத் சிங் கூறுகையில், இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. 100 ஏர் இந்தியா விமானிகள் உடல் நலம் சரியில்லை என்று கூறி பணிக்கு வராமல் இருப்பது சட்டவிரோதமானது. வேலைநிறுத்தம் செய்வதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லி விட்டுச் செய்ய வேண்டும். ஆனால் இப்படி குறுக்குத் தனமாக ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதமானது என்றார் அவர்.
தற்போது டெல்லி, மும்பையில் ஏர் இந்தியா நிறுவன விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் பணிக்கு வராத பைலட்டுகளில் 10 பேரை ஏர் இந்தியா அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகள் இன்று மாலை 6 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.