மனித வெடிகுண்டு மிரட்டல்: ஏர்போர்ட்டுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: விமான நிலையங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று அஞசப்படுவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று சிவில் விமான போக்குவரத்து பணியகம் அனைத்து விமான நிலையங்களையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்கள் நிற்கும் இடம், பயணிகளின் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக சோதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இதே போன்று விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அல் கொய்தா தீவிரவாதிகள் ஆபரேஷன் மூலம் வயிற்றுக்குள் வெடிகுண்டுகளை வைத்து அமெரிக்க விமானங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதையடுத்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.