மனைவியோடு சேர்ந்து இன்ஸ்பெக்டருடன் மோதிய வெங்கடேஷ் பிரசாத்!
ஞாயிற்றுக்கிழமை, பெங்களூர் காவல்துறைக்கு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் பெரும் சோதனையாக அமைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும், டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் அன்று ஐபிஎல் போட்டி நடந்தது.
நள்ளிரவு 12.10 மணியளவில் போட்டி முடிவடைந்த தருவாயில், வீரர்களுக்கான பகுதியில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதை ஒரு உதவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பார்த்து விட்டு அங்கு விரைந்து சென்று அவரை அங்கிருந்து போகுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண் நான் ஜெயந்தி, வெங்கடேஷ் பிரசாத்தின் மனைவி.என்னை எப்படி போகச் சொல்லலாம் என்று கேட்டு கடுமையாக போலீஸ்காரரை திட்டி வாதிட்டுள்ளார்.
ஆனால் அதை கண்டு கொள்ளாத போலீஸ்காரர், விதிமுறைகளை யாருக்காகவும் விலக்கிக் கொள்ள முடியாது. உடனே இடத்தைக் காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், ஜெயந்தியுடன் இருந்த ஒருவர் செல்போன் மூலம் பிரசாத்தை வரவழைத்தார்.
வேகமாக வந்த வெங்கடேஷ் பிரசாத், வந்த வேகத்தில் போலீஸ்காரருடன் கடுமையான மோதலில் ஈடுபட்டார். இதையடுத்து பிற போலீஸ்காரர்கள் அந்த உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாகத் திரண்டனர். பெரும் வாக்குவாதம் மூண்டது. போலீஸாரை அவதூறாகப் பேசினார் பிரசாத் என்றும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெங்கடேஷ் பிரசாத்திடம் விதிமுறைகளை வகுப்பது என்பது அதைக் கடைப்பிடிக்கத்தான். உங்களது பாதுகாப்புக்குத்தான் நாங்கள் வருகிறோம். நீங்களே இப்படி முறைகேடாக நடந்தால் எப்படி என்று கடுமையாக கேட்டனர்.
அதன் பின்னரே வெங்கடேஷ் பிரசாத் சற்று அமைதியடைந்தார். பின்னர் தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் அவர் வெளியி்ட்ட ஒரு செய்திக்குறிப்பில், நடந்த சம்பவத்திற்காக நானும், எனது மனைவியும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். பிரச்சினை சுமூகமாக முடிந்தது, தீர்க்கப்பட்டு விட்டது என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் தரப்பில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம், பிரசாத்தின் நடத்தை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாம். அதில் பிரசாத்தின் நடத்தை விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.