அடுத்த சிறைக்குப் போகப் போகும் திமுக மாஜி அமைச்சர் தா.மோ.அன்பரசன்?
சென்னை வருவாய்க்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்னாள் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 2006 முதல், 2011 வரை தான் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 54 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 68 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
தா.மோ.அன்பரசன் அவர் பெயரிலும், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் தமிழ்மாறன் ஆகியோர் பெயரிலும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி குவித்தது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு, தா.மோ.அன்பரசன், அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் தமிழ்மாறன் ஆகியோர் மீது, செங்கல்பட்டு தனி நீதிபதி மற்றும் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், 1200 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டு, இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல மாஜி திமுக அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு, நில அபகரிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் பலர் கைதானார்கள், சிலர் வெளியே வந்துள்ளனர். சிலர் கைதாக காத்துள்ளனர். இந்த வரிசையில் விரையில் தா.மோ. அன்பரசனும் இடம் பெறுவார் என்று தெரிகிறது.