தீவிபத்தில் காயமடைந்து குணமடைந்த தீயணைப்பு அதிகாரி பிரியா ஜெ.வுடன் சந்திப்பு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை எழிலகம் வளாகத்தில் அமைந்துள்ள சமூகநல இயக்குனரகம், தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனரக கட்டிடங்களில் கடந்த 15-1-2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அத்தீயினை அணைக்கும் பணியில் கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்தபோது பலத்த தீக்காயமடைந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முதல்வர் ஜெயலலிதா 19-1-2012 அன்று சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரனை நேரில் சென்று உடல்நலம் விசாரித்து, மீண்டும் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குரிய அனைத்து மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.
அதன்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் 7-5-2012 அன்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்து, தீவிபத்தில் சிக்கி பலத்த தீக்காயங்களால் உயிருக்கு போராடிய நிலையில் நேரில் சந்தித்து தைரியமும், ஆறுதலும் கூறியதோடு, தனது சிகிச்சைக்காக அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.