Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

என்.எல்.சி. பிரச்சனைக்கு பிரதமர் தீர்வு காண வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

Posted by:
Published: Tuesday, May 8, 2012, 10:07 [IST]

சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நெய்வேலி தொழிலாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13,000 பேர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 21ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநில அரசுக்கு நேரடியாக இதிலே தொடர்பு இல்லாவிட்டாலும் மத்திய அரசிடம் வலியுறுத்தி அங்கே பாதிக்கப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க முன்வந்திருக்கலாம்.

2008ம் ஆண்டு நெய்வேலி தொழிலாளர்கள் இதே பிரச்சனைக்காக போராட்டம் அறிவித்தவுடன் அந்த ஆலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்துப் பேசி, அங்கே ஒரு சுமூக முடிவு கண்டு உடன்பாடு ஏற்பட வழிவகை வகுத்தது திமுக ஆட்சி. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சித்த போது, அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டி, மத்திய அரசுக்கு நானே கடிதம் எழுதி, அந்தப் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

மத்திய அரசும், இந்தத் துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு போராடுகின்ற தொழிலாளர்களை அழைத்துப் பேசி சுமூக முடிவு காண முன் வரவேண்டுமென்றும், அதற்கு பிரதமர் ஆவன செய்திட வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

மின் கட்டண உயர்வை எதிர்த்து மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிக் கூடங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விசைத்தறியாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

மற்ற தொழில்களோடு ஒப்பிடும்போது விசைத்தறிக்கான மின் கட்டணம் 110 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கூறி போராட்டம் நடத்துகிறார்கள். இவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். ஆனால் இது பற்றியும் அதிமுக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஆளுங்கட்சி, தனது எதிர்க் கட்சி உறுப்பினர்களிடமிருந்து என்ன கருத்து சொல்லப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து செயல்பட்டால் தான் முறையான ஆட்சியாகத் தொடர முடியும்.

உதாரணமாக, 13-11-2008 அன்று மின்சாரம் பற்றிய விவாதம் நடைபெற்ற போதுகூட - நான் அவையிலே இல்லாத நேரத்தில் - பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து - அய்யோ, அவர்கள் மின்சாரம் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டுவிட்ட காரணத்தால், மின்சார விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமே என்று எண்ணி - நானே எதிர்க்கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசிட முயற்சித்து - அது கிடைக்காத காரணத்தால் - ஆளுங்கட்சியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு - எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கேச் சென்று அதிமுகவினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன்.

மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியிலே பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களையெல்லாம் கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையிலேயே அழைப்பு விடுக்கவும் கேட்டுக்கொண்டேன். அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார். ஆனால் இத்தனைக்கும் பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள் அவைக்கு வரவும் இல்லை. மின்சார விவாதத்திலே கலந்து கொள்ளவும் இல்லை. ஆனாலும் அண்ணா கற்றுக் கொடுத்த அந்தப் பண்பாட்டுடன் நாம் நடந்து கொண்டோம் என்ற மன ஆறுதல் எனக்குக் கிடைத்தது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has requested PM Manmohan Singh to find a solution to the NLC workers' strike. ADMK government could have insisted centre to solve this issue, he told.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter