For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை சைக்கிள் குண்டு வெடிப்பு: இமாம் அலி கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்!

By Siva
Google Oneindia Tamil News

Madurai
மதுரை: மதுரையில் சைக்கிள் குண்டு வெடித்தது தொடர்பாக சிக்கியுள்ள 3 பேர் இமாம் அலியின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.

மதுரை அண்ணாநகர் ராமர் கோவில் வாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக அனாதரவாக நின்று கொண்டிருந்த ஒரு சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு கடந்த 1ம் தேதி அதிகாலை வெடித்துச் சிதறியது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும் மதுரை பரபரப்பாகிவிட்டது.

ராமர் கோவிலை தகர்க்க நடந்த சதியா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று சந்தேகம் எழுந்தது. சித்திரைத் திருவிழா நடந்து வரும் நிலையில் இந்த குண்டு வெடித்தது.

மேலும் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மதுரையில் பாஜகவின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அத்வானி, நிதின் கத்காரி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டை சீர்குலைப்பதற்காக இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அல் உம்மா அமைப்பினரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அத்வானியின் ரத யாத்திரை தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் நடந்தபோது திருமங்கலம் அருகே அவர் செல்லவிருந்த பாதையில், பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அல் உம்மா அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை இன்று வரை போலீசார் தேடிக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கரிமருந்து மற்றும் பேட்டரி, கடிகாரம், இரும்பு செயின், சைக்கிள் ஆகிய பொருட்களை சோதனை செய்ததில் வெடிகுண்டு செய்வதில் கைதேர்ந்தவர்கள் தான் இதை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இது தவிர கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஒத்தக்கடை அருகே ஓடும் பேருந்தில் சிக்கிய டிபன் பாக்ஸ் குண்டு, புதூர் டெப்போவில் பேருந்தில் சிக்கிய வெடிகுண்டு, மாட்டுத்தாவணி டாஸ்மாக் பாரில் வெடித்த குண்டு ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் தான் இந்த சைக்கிள் குண்டையும் வைத்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.

சைக்கிள் குண்டுவெடிப்பு தொடர்பாக அண்ணாநகர், நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலரைப் பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் 3 பேர் இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த 3 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அல் உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை தனிப்படையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி கூறுகையில்,

மதுரையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது. இது தொடர்பாக சிலரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றார்.

English summary
Police are investigating 3 of Imam Ali's men in connection with the Madurai bomb blast held on may 1. The trio are allegedly involved in the bomb blast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X