எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஜுலை 2-ந் தேதி கலந்தாய்வு: தமிழக அரசு
சென்னை: எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 2 ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 22-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம்
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 2012-2013-ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, விண்ணப்பங்கள் வழங்குதல் குறித்த தகவல்கள் செய்திதாள்களில் 13-ந் தேதி விளம்பரமாக வெளியிடப்படுகிறது.
விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் இணையதளம் மூலம் 15-ந் தேதி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 30-ந் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுன் 2-ந் தேதி, மாலை 5 மணிவரை அளிக்கலாம்.
ரேண்டம் எண்
ஜுன் 15-ந் தேதி சுழற்சி (ரேண்டம்) எண் வழங்கப்படும். ஜுன் 20-ந் தேதி மாணவர்களின் மதிப்பெண் தகுதி அறிவித்தல், ஜுலை 2-ந் தேதி முதற் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்தல் நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு அகில இந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர் இணையதளம் மூலமே வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.