ராவணன் வெளியே... நடராஜன் இன்னும் உள்ளே!
சென்னை: சசிகலாவின் உறவினரான எம்.ஆர்.பி ராவணனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அடுத்து அவர் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வீடு அபகரிப்பு முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கும், அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டார்.
தொடர் வழக்கு
அதன் பிறகு கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவிக்குமாரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு, மணல் கான்ட்ராக்ட் வாங்கி தருவதாக கூறி வேலூரை சேர்ந்த ரவி, திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சைதாப்பேட்டையை சேர்ந்த யுவநேசன் ஆகியோரிடம் தலா ரூ.1 கோடி மோசடி உள்பட 5 வழக்குகளில் சசிகலா உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டார்.
ராவணன் வெளியே
இந்த 5 வழக்குகளிலும் பலமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மேட்டுப்பாளையம், சிறுமுகையில் பதிவான இரு வழக்கிலும் கோவை மாவட்ட நீதிமன்றம் ராவணனை ஜாமீனில் விடுவித்தது. சைதாப்பேட்டை நீதிமன்றமும் ஜாமீனில் விடுவித்தது. ஆலந்தூர், வேலூர் நீதிமன்றங்கள் திங்கட்கிழமை ராவணனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டன.
இதையடுத்து ராவணன் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.
நடராஜன் உள்ளே
அதேசமயம் வீடு அபகரிப்பு முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடராஜனுக்கு காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடராஜன் மற்றும் சிவக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் திங்கள்கிழமை காவல் முடிந்தது.
இந்த நிலையில், தஞ்சை 3 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து, வரும் மே 21ம் தேதி வரை நடராஜனுக்கு காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார்.