தென்மாவட்ட ரயில்களில் ஜூன் 10 வரை இடமி்ல்லை: வெய்டிங் லிஸ்ட்டில் 50,000 பேர்
நாகர்கோவில்: குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களில் ஜூன் 10ம் தேதி வரை இடமில்லாத நிலை உள்ளது. காத்திருப்போர் பட்டியலில் 50,000 பேர் உள்ளதால் சிறப்பு ரயி்ல்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்துள்ளன. இதையடுத்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ரயில்களில் முன்பதிவு செய்து போய்க் கொண்டுள்ளனர். அதுபோன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டத்தினரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் பெரும்பாலான ரயில்களில் இருக்கைகள் நிரம்பிவிட்டது.
நாகர்கோவில் வழியாக செல்லும் திருவனந்தபுரம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ஜூன் 10ம் தேதி வரை இடம் இல்லை. காத்திருப்போர் பட்டியலும் நீள்கிறது.
நெல்லை எக்ஸ்பிரஸ், முததுநகர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களிலும் இடமில்லை. ஒவ்வொரு ரயிலுக்கும தினசரி சராசரியாக 250க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அந்த அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு 7,000 முதல் 8,000 பேர் வரை காத்திருக்கின்றனர். வாராந்திர ரயில்களிலும் இதே நிலை தான் உள்ளது.
அந்த வகையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல மட்டும் சுமார் 50,000 பேர் முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். எனவே பொதுமக்களின் கோடை கால தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வே கணிசமான அளவுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.