சந்தன வீரப்பனின் மகள் திடீர் மாயம்- கணவர் புகார்: தாயார் வீட்டில் கண்டுபிடிப்பு
சந்தனக் கடத்தல் வீரப்பன்-முத்துலெட்சுமி தம்பதிக்கு வித்யாராணி, பிரபா என 2 மகள்கள் உள்ளனர். இருவரும் சென்னை கல்லூரியில் படித்து வந்தனர்.
வித்யாராணி சென்னையில் படிக்கும்போது கல்லூரி மாணவரான மரிய தீபக் என்பவரை காதலித்தார். இவர் கிருஷ்ணகிரி பாத்திமா நகரை சேர்ந்தவர். இருவரும் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி முத்துலெட்சுமியின் எதிர்ப்பை மீறி சென்னையில் உள்ள ஒரு சர்ச்சில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு வித்யாராணி தனது கணவர் மரியதீபக்குடன் கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வித்யாராணி பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் நேற்று முன்தினம் முதல் வித்யாராணியை காணவில்லை. இது குறித்து அவரது கணவர் மரியதீபக் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் வித்யாராணி மேட்டூரில் உள்ள அவரது தாயார் முத்துலட்சுமி வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போனில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் வித்யாராணி கூறுகையில், எனக்கு சிறுவயது முதலே ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நான் மரியதீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
இதைத்தொடர்ந்து கணவருடன் கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தேன். சரியான வருமானம் இல்லாததால் வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வறுமை தாண்டவமாடியது. திருமணத்தின் போதே ஐ.ஏ.எஸ் ஆன பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்வது என முடிவு செய்தோம். ஆனால் எனது கணவர் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்துகிறார்.
மேலும் வீட்டில் நிலவும் வறுமையால் எனது ஐ.ஏ.எஸ். லட்சியம் கனவாகி விடுமோ என்ற அச்சம் எழுந்தது. இதனால் நான் எனது அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். முதலில் ஐ.ஏ.எஸ். படிப்பில் வெற்றி பெறுவதுதான் எனது லட்சியம் என்று கூறியுள்ளார் வித்யாராணி.