ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமிக்கு கொலை மிரட்டல்
சென்னை: மாட்டுக்கறி திருவிழா குறித்து கருத்து தெரிவித்திருந்த ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமி தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமிகளை கைது செய்யக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பாஜகவும், அதன் துணை அமைப்பான ஏ.பி.வி.பி.யும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த திருவிழாவில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமி டுவிட்டரில் விமர்சித்திருந்தார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து மீனா கந்தசாமி குறித்து டுவிட்டரில் அநாகரிகமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் சிலர் எழுதியுள்ளனர் என்று தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து மீனா கந்தசாமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.