நாடாளுமன்ற மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல்? மமதா பானர்ஜி தகவல்
இது தொடர்பாக தமது கட்சித் தொண்டர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, நாடாளுமன்ற மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி அதாவது 2013-ம் ஆண்டே தேர்தல் நடத்துவது பற்றி டெல்லியில் ஒரு முக்கிய கட்சி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ள கட்சித் தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றார் அவர்.
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது என்றும் 2014-ம் ஆண்டுதான் தேர்தல் நடைபெறும் என்றும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மமதாவோ முன்கூட்டியே தேர்தலை நடத்த காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது என்பதை காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜக வரவேற்பு
இதனிடையே நாடாளுமன்ற மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதை வரவேற்பதாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டே மக்களவைக்கான தேர்தலை நடத்தினாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மறுப்பு
ஆனால் காங்கிரஸ் கட்சியோ 2014-ம் ஆண்டுதான் மக்களவைக்குத் தேர்தல் நடைபெறும் என்று மீண்டும் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். இருப்பினும் எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.