பாஜக தலைவராக கத்காரி தொடர ஆர்.எஸ்.எஸ். ஆதரவு
பா.ஜ.க. தலைவரான கத்காரியின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். வரும் டிசம்பர் மாதத்துடன் கத்காரியின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் புதிய தலைவர் தேர்வு குறித்து அக்கட்சி ஆலோசனை நடத்தி வந்தது . பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் இது தொடர்பாக விவாதித்தனர்.
தற்போதைய தலைவரான கத்காரியை தொடர்ந்து தலைவராக பதவி வகிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் கட்சியின் தற்போதைய விதிப்படி ஒருவர் 2-வது முறையாக தொடர்ந்து தலைவர் பதவி வகிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் தலைவராக முடியும். இதனால் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் வரும் 24,25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் கத்காரியின் பதவி நீட்டிப்புக்கு நிர்வாகக் குழுவில் ஒப்புதல் பெறப்படக் கூடும். நாடாளுமன்றத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடைபெறக் கூடும் என்ற நிலையில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவே கத்காரிக்கு நீட்டிப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.