அம்பேத்கர் கேலிச்சித்திரம்- மத்திய அமைச்சர் கபில்சிபல் பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் பதவி விலக வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை அம்பேத்கர் நத்தை வேகத்தில் செய்வதை போன்றும், அப்பணியை விரைவுபடுத்தும்படி அம்பேத்கரை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சாட்டையால் அடிப்பது போன்றும் அமைந்துள்ள கேலிச் சித்திரம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அம்பேத்கரை அவமதிக்கும் பாடநூலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தியதை அடுத்து அந்த பாடநூல்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கிறார்.
கபில்சிபல் பதவி ஏற்ற நாளிலிருந்தே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அவமதிக்கும் வகையிலும் அவர்களின் நலனுக்கு எதிரான வகையிலும் செயல்பட்டு வருகிறார். இதன் உச்சக்கட்டமாகத்தான் அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இப்படி ஒரு செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு காரணமான மத்திய அமைச்சர் கபில்சிபல் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த பாடநூலை தயாரித்தவர்கள் மீதும், வெளியிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.