கலெக்டர் மேனன் கடத்தப்பட்ட சுக்மாவில் பாஜக தலைவரை கடத்திய மாவோயிஸ்டுகள்
ராய்ப்பூர்: கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட அதே சுக்மா மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவரை மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். பின்னர் அம்மாநில அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு 12 நாட்கள் கழித்து கலெக்டர் விடுவிக்கப்பட்டார். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே அதே மாவட்டத்தில் பாஜக சுக்மா மாவட்ட செயலாளர் மொச்சாகி ஜோகா என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர்.
மொச்சாகி நேற்று மாலை தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை வழிமறித்த மாவோயிஸ்டுகள் அவரை கடத்திச் சென்றனர்.
இதேபோன்று தோர்னாபால் பகுதியில் இருந்து மொச்சாகி கச்சே என்ற வியாபாரியையும் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.