கணக்கு காட்டாமல் ரூ.176 கோடி பதுக்கல்: உ.பி. சாராய அதிபர் பான்டி சத்தா ஒப்புதல்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பான்டி சத்தா, அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு நெருக்கமான தொழிலதிபர். அவர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அவரது வீடு, வணிகவளாகங்கள் என டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதிகாரப்பூர்வமாக ரூ11 கோடி ரொக்கம் கைப்பற்றபட்டதாகவும் 13 வங்கி லாக்கர்களை சீல் வைத்திருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் அவர்கள் செலுத்திய வரியையும் ஆய்வு செய்து வந்தனர். அண்மையில் அவர்கள் கொடுத்த வங்கி செலான்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்தனர். இதில் 176 கோடி ரூபாய்க்கு கணக்குகாட்டாமல் மறைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொழிலதிபர் பான்டி சத்தாவும் ஒப்புக் கொண்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது தொடர்பாக பான்டி சத்தாவின் நிறுவனத்தினர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.