லோக்சபாவில் இன்று சிக்கிய அமைச்சர் அஜித்சிங்..ஒன்றாகத் திரண்டு பெண்டெடுத்த எதிர்க்கட்சிகள்
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் நாள்தோறும் ஒரு அமைச்சர் சிக்கிக் கொண்டு 'நெஞ்சுல குத்துங்க.. நேர்மையை சந்தேகிக்காதீங்க'ன்னு உருக்கமாக பேசுவது வழக்கமாகப் போய்விட்டது. இன்றைய கோட்டா விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங்குக்குக் கிடைத்தது. விடுவார்களா எதிர்க்கட்சிகள்...
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி வந்த அஜித்சிங், இந்தியன் ஏர்லைன்ஸ்- ஏர் இந்தியா இரண்டையும் இணைச்சது தவறாப் போச்சு...என்று ஆரம்பித்து பேசாம தனியாருக்குக் கொடுத்திருக்கலாம் என்கிற தொனியில் பேசிவந்தார்.
அரசு நிறுவனத்தை தனியார்மயமாக்குவது என்பதெல்லாம் அரசின் கொள்கை முடிவு. நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது அதெப்படி ஒரு அமைச்சர் அவைக்கு வெளியே இதுபற்றி பேச முடியும் என்று மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டின. இது பற்றி விவாதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
ஏர் இந்தியா விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஒரு விளக்கம் கூட அளிக்காமல் அஜித்சிங் ஊடகங்களிடம் பேசிவருகிறார் என்று சுஷ்மா ஸ்வராஜ் டென்ஷனாகிப் பேசினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மீராகுமார், என்னிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தால்தானே ஏதாவது செய்ய முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய இடதுசாரி உறுப்பினர்களும் பாஜக உறுப்பினர்களும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அஜித்சிங் விளக்கம் அளிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் .இதனால் அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணிவரை சபாநாயகர் ஒத்தி வைத்திருந்தார்.