மதுரையில் போலி டீ ஆலை கண்டுபிடிப்பு : ஆலைக்கு சீல் வைப்பு
மதுரை நேருநகரில் கண்ணன் என்பவரின் வீட்டில் போலி டீத்தூள் தயாரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் கலால் துறை உதவி ஆணையர் ரவீந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், நேரு நகரில் உள்ள கண்ணன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவருடைய 4 குடோன்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் குடோன் முழுவதும் மாட்டுச்சாணம், களிமண் ஆகியவை தான் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இந்த மூலப்பொருட்களை கொண்டு தான் டீத்தூள் தயாரித்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கிருந்த 10 டன் போலி டீ தூளையும் பறிமுதல் செய்தனர்.
மாட்டுசாணம், மஞ்சனத்தி இலை
இந்த போலி டீத்தூளை குளத்தில் இருந்து அள்ளப்படும் களிமண் போன்ற கருப்பு மண், காய்ந்த மாட்டுச்சாணம் ஆகியவற்றை நன்றாக காய வைத்து தயாரிக்கின்றனர். பின்னர் அதில் மஞ்சணத்தி மரத்தின் இலை, டீத்தூள் சாயம் போன்றவை கலந்து டீத்தூளாக தயாரிக்கின்றனர். அதன்பின் பிரபல நிறுவனத்தின் பாக்கெட்டுகளில் இந்த டீத்துளை அடைத்து விற்பனை செய்கின்றனர். அதனால் அசலுக்கும், போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்துள்ளது.
தரமான டீ தூள் கிலோ 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த போலி டீத்தூள் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். நகரில் விற்பனை செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து கிராமப்புறங்களில் உள்ள அனைத்து டீக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று இந்த போலி டீத்தூளை விற்பனை செய்து வந்து உள்ளனர். குறைந்த விலையில் டீத்தூள் கிடைப்பதால், அதில் கலக்கப்படும் பொருட்கள் குறித்து அறியாமல் டீக்கடைக்காரர்களும் இந்த போலி டீத்தூளை அதிகளவில் வாங்கி டீ போட்டு விற்பனை செய்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் விசாரணை
சோதனைக்குப்பின்னர் மாவட்ட ஆட்சியர் சகாயமும் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து அவர் கண்ணனின் வீடு மற்றும் குடோனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.போலி டீத் தூள் விற்பனை எங்கெல்லாம் நடந்துள்ளது என்பதை கண்டறிய 25 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் மாவட்ட வழங்கல் அதிகாரி சுந்தரேசன் தலைமையில் மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
புறநகரில் ஆய்வு
உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மேலூர், சோழவந்தான் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடந்தது. அப்போது அதிகாரிகள் டீக்கடைகள் மற்றும் விடுதிகளுக்கு சென்று போலி டீத்தூள் பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்தனர். மதுரை மாவட்ட வழங்கல் அதிகாரி சுந்தரேசன், கடச்சனேந்தல் பகுதியில் உள்ள தர்மர் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது டீக்கடைக்கு வெளியே நின்ற போதையில் நின்றுகொண்டிருந்த ஆசாமி ஒருவர் சுந்தரேசனின் சட்டையை இழுத்து பிடித்து திடீரென்று தாக்கினர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்த அதிகாரிகள் போதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
இனி புதிதாக வெளியூர் போகிறவர்கள் டீ, காபி வாங்கி குடிக்கும் முன் யோசனை செய்து கொள்வது நல்லது.