அணுமின் நிலையங்களின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசத்துக்கு இடமே இல்லை: மக்களவையில் மன்மோகன்சிங்
டெல்லி: இந்திய அணுமின் நிலையங்களின் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய மன்மோகன்சிங், நாட்டில் மொத்தம் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு அணுமின்நிலையத்திலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணு உலைகளின் பாதுகாப்பில் நிச்சயம் நாம் சமரசம் செய்ய மாட்டோம். அணுமின் உற்பத்தியை கைவிட்டால் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போல் நிச்சயம் இந்திய அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார் அவர்.
கூடங்குளம் அணுமின் நிலையம்
முன்னதாக கேள்வி நேரத்தின் போது, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஜெயதுரை எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இணை அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணுமின்நிலையம் அமைக்க நிலம் கொடுத்தோருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு தரப்படும். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் லாபத்தில் 2 விழுக்காடு கூடங்குளம் சுற்றுவட்டார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றார்.