ராசாவுக்கு திமுக முழுமையாக துணை நிற்கும்: கருணாநிதி
கோபாலபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கேள்வி: 15 மாதங்களாக சிறையில் இருந்த ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்வி: ஜாமீனில் ராசா வெளியே வந்திருப்பது வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவர் முதலில் அவருடைய பெங்களூர் வழக்கைப் பற்றி பேசட்டும். ராசா வழக்கைப் பற்றி பிறகு பேசலாம்.
கேள்வி: ராசா உங்களை எப்போது சந்திப்பார்?
பதில்: அதெல்லாம் இன்னும் தெரியவில்லை.
கேள்வி: அவர் திமுகவில் தீவிரமாக ஈடுபடுவாரா?
பதில்: அவர் எப்போதும் கழகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்தான். புதிதாக அவர் தீவிரமாக ஈடுபடுவாரா என்பதல்ல; தீவிரவாத கருத்து என்பது வன்முறைவாதம் என்று அர்த்தமல்ல.
கேள்வி: கட்சியிலுள்ள எல்லோரும் அவரை ஆதரிப்பார்களா?
பதில்: எல்லோரும் அவரை ஆதரிக்கிறோம்.
கேள்வி: ராசாவைப் பார்க்க டெல்லி செல்லும் வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: வாய்ப்பு இருந்தால் போவேன்.
கேள்வி: அதிமுக ஆட்சி ஓராண்டு முடிவதாகக் கூறி, மிகப்பெரிய விளம்பரமெல்லாம் செய்கிறார்களே; அதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: ஓராண்டாக, இருண்டு கிடக்கும் தமிழகம் எப்போது விடியுமோ? என்றார்.
மேலும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ராசா தொடர்ந்து நீடிப்பார் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.