எனக்கு கருணாநிதியுடன் தந்தை-மகன் உறவு: மதுரை ஆதீனம்
மதுரையில் நித்யானந்தாவுடன் இணைந்து நிருபர்களிடம் பேசிய அவர், தஞ்சைப் பகுதியில் உள்ள ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில்களின் குடமுழுக்கு நடத்துவது குறித்த சிந்தனையில் உள்ளேன்.
ஆதீன மடத்துக்குப் பாதுகாப்பு கோரியுள்ளோம். நியாயத்துக்கும் உண்மைக்கும் ஆதரவளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உள்ளது. அதனடிப்படையில் எங்களுக்கும் ஆதரவளிக்கும்.
கருணாநிதி முழு நேர அரசியல்வாதி, மூதறிஞர். அவர் என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பது தந்தையானவர் பிள்ளையைத் திட்டுவது போலத்தான். ஆகவே, கருணாநிதியின் அவதூறான எழுத்தைப் பொறுத்துக் கொள்ள நான் தயார்.
ஆதீனமாவதற்கு முன்பு நான் திமுகவில் தான் இருந்தேன். ஆதீனமான பின்னர் திமுகவை ஆதரித்தேன் என்பதில் சந்தேகமில்லை. 1987ல் எனது தலைமையில்தான் அண்ணா அறிவாலயத் திறப்பு விழா நடைபெற்றது.
இரவு பகலாக தமிழுக்காக உழைத்தேன். ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் எனக்கு மரியாதை தரவில்லை. இந் நிலையில், அதிமுகவிலிருந்து என்னிடம் பேசினார்கள். அதனடிப்படையில் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறோம்.
நித்யானந்தாவை ஆதீனகர்த்தராக நியமித்தால் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தே தான் நியமித்தேன். தமிழக முதல்வரைச் சந்திக்க தேதி கேட்டுள்ளோம். நிச்சயம் அவர் அனுமதி தருவார் என நம்புகிறோம்.
நித்யானந்தா சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான சான்று வைத்துள்ளார் என்றார் ஆதீனம்.
அப்போது உடனிருந்த நித்யானந்தா தனது சாதிச் சான்றிதழைக் காட்டினார்.