கறுப்பு பணத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகள்: ராம்தேவ்
நடப்பு ஐ,பி.எல்.5வது தொடர் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை, பாலியல் புகாரில் சிக்கிய லூக், சர்ச்சைக்குரிய சித்தார்த் மல்லையா என்று ரெக்கை கட்டி பறக்கின்றன சர்சைகள்.
இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல். போட்டிகளுக்கு மூடு விழா நடத்தியாக வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய யோகா குரு ராம்தேவும் இப்போது ஐ.பி.எல்.போட்டிகளுக்கு எதிராக களத்தில் குதித்திருக்கிறார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில். ஐ.பி.எல். போட்டிகள் என்பது அடுக்கடுக்கான ஊழல்கள்தானே தவிர வேறொன்றும் இல்லை. இதில் மிகப் பெரிய அளவில் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒழுக்கக்கேடான செயல்பாடுகளுக்கு இது ஒரு நுழைவுச் சீட்டு. நாட்டின் நலன் கருதி இந்தக் இந்த ஐ.பி.எல். போட்டிகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் கொள்ளைதான் நடைபெறுகிறது என்றார்.
மேலும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவதன் மூலமே நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். நக்சல் பிரச்சனைகளைக் கூட முடிவுக்குக் கொண்டுவரலாம். ஏனெனில் மாவோயிஸ்டுகளும் கூட கறுப்புப் பணம் மூலமே ஆயுதங்களை வாங்குகின்றனர் என்றார் அவர்.