அதிமுக ஆட்சியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன: கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை அதிமுக அரசின் செயல்பாடுகளைக் குற்றம் சாட்டுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த அறிக்கையைப் பார்த்த யாருக்கும் அப்படித் தோன்றவில்லை.
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கத்தோடு நடத்தப்படுவதில்லை. அதிமுக ஆட்சியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தோடு இயங்கவில்லை.
கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழிந்தால், பொதுத் துறை நிறுவனங்களை லாபத்தோடு நடத்தலாம். ஆனால் மக்கள் நல அரசு இலக்கணம் அது இல்லை.
2010-11ம் ஆண்டில் மின் வாரியத்துக்கு ரூ.10,294.64 கோடி இழப்பு ஏற்பட்டது என்று அதிமுக அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. தற்போது அதிமுக அரசு செய்திருப்பதைப் போல மின் கட்டணங்களை உயர்த்தியிருந்தால் ரூ.10,000 கோடி மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் திமுக அரசு மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டாலும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்று நினைத்தது. இப்போதும் அப்படித்தான் நினைக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.