தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்
சென்னை: இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது.
ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
பின்னர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், இலங்கையில் தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப் படுகொலை புரிந்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
சுதந்திர தமிழின தேசம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்துவதே சரி. இலங்கையில் நடந்த போரின்போது இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு ஐ.நா. முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும். 1967ம் ஆண்டு முதல் எங்கள் கட்சியின் கொள்கையே தூக்குத் தண்டனை கூடாது என்பதுதான் என்றார்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருமுருகன் காந்தி, கவிஞர்கள் அறிவுமதி, காசி ஆனந்தன், ஓவியர்கள் மருது, வீரசந்தானம் உள்பட பலரும் இதில் பங்கேற்றனர்.