கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவில்பட்டி இருளப்பன் கைது
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கடந்த 10ம் தேதி 3 கடிதங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த கடிதங்களில் மே 21ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கடிதத்தில் பெறுநர், கலைச்செல்வம், கூடங்குளம் அணு மின் நிலையம் என்றும் அனுப்புனர் மக்கள் பொதுநலக்குழு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த ஞாயிற்றுகிழமை கோவில்பட்டியைச் சேர்ந்த அலங்காரம் மகன் இருளப்பன்(39) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த அலங்காரம் மகன் இருளப்பனும் (39), குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பண்டாரசாமி மகன் கலைச்செல்வமும்(24) உறவினர்கள். கடந்த 2005ம் ஆண்டு முதல் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கலைச்செல்வனுக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒப்பந்த வேலை கிடைத்தால் இருளப்பனுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கலைச்செல்வனின் வேலையை காலி செய்து பிரச்சனையில் சிக்க வைக்க கலைச்செல்வம், கூடங்குளம் அணுமின் நிலையம் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். விசாரணையில் இதை அவரே ஒப்புக் கொண்டார் என்றானர்.