மோடியை கோயபல்ஸுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதா?: காங்கிரஸூக்கு பாஜக கடும் எதிர்ப்பு
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பொய்யே வாழ்க்கையாகக் கொண்ட ஹிட்லரின் பிரச்சாரகரான கோயபல்ஸூடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்திருப்பதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்களைப் பட்டியலிட்டு மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, நரேந்திர மோடி ஒரு கோயபல்ஸ் மாதிரி பொய்யை சொல்லுகிறார் என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக மேலிடம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
" நாடே போற்றக்கூடிய புகழ்பெற்ற மனிதரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போய் கோயபல்ஸூடன் ஒப்பிட்டுப் பேசுவதா? அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய வார்த்தைகள் 1975-76ஆம் ஆண்டுகளில் அவசர நிலை சட்டம் அமலில் இருந்தபோதுதான் காங்கிரஸ் பயன்படுத்தியது. இன்னமும் அந்த மனநிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது, இது 2012-ம் ஆண்டு என்பதை காங்கிரஸ் மனதில் கொள்ள வேண்டும்" என்று கடுமையாகத் தாக்கியுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.