பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: 8 மாநிலங்களில் அதிமுக 29-ந் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை: நாட்டை உலுக்கியுள்ள வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் நாளை மறுநாள் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியிருப்பது, வரலாற்றில் எப்போதுமே நிகழ்ந்திராத அடாத செயல். இந்தக் கடும் விலை உயர்வைக் கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.
இன்று நிலவுகிற பொருளாதாரச் சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
திமுகவின் கண்துடைப்பு
மத்திய அரசை தாங்கிப் பிடிக்கும் திமுக தலைவர் கருணாநிதியோ, பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தவில்லை. அதேசமயம், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில்..
சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய அரசு அரசைக் கண்டித்தும், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கட்சியின் அமைப்புரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
7 மாநிலங்களில்...
புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புது தில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதே தேதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அதில் தெரிவித்துள்ளார்.