அரசியல் கொலைகள் பேச்சு: கேரள சிபிஎம் தலைவர் மணி மீது கொலை வழக்குப் பதிவு
இடுக்கி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி தனது அரசியல் எதிரிகளை கொலை செய்தது என்று விவரித்த அக்கட்சியின் இடுக்கி மாவட்ட செயலாளர் எம்.எம். மணி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எம்.எம்.மணி கடந்த 25ம் தேதி தொடுபுழாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
எங்கள் கட்சியின் அரசியல் எதிரிகள் யார், யார் என்பதை முதலில் பட்டியலிட்டோம். பட்டியலில் உள்ள ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், இன்னொருவர் அடித்துக் கொல்லப்பட்டார், மற்றொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அரசியல் கொலைகள் ஒன்றும் எங்கள் கட்சிக்கு புதிதன்று என்றார்.
முதல் கொலை:
1982ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி ஐஎன்டியூசி தலைவராக இருந்த அஞ்சேரி பேபி(28) சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட 7 பேரை கைது செய்தனர். ஆனால் அக்கட்சியினர் சாட்சியங்களை நீதிமன்றத்தில் வைத்தே மிரட்டினர் என்று கொல்லப்பட்ட பேபியின் சகோதரர் பென்னி தெரிவி்ததார். போதிய சாட்சியம் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 1986ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இரண்டாவது கொலை:
1983ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி ராஜகுமாரி பஞ்சாயத்து தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முல்லன்சிரா மத்தாய் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மூன்றாவது கொலை:
1983ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி காங்கிரஸ் தலைவர் முட்டக்காடு நானப்பன் கட்சி விழாவுக்கு சென்று கொண்டிருக்கையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூஷராஜ் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைத் துவங்கிய சந்திரசேகரன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 கொலைகள் பற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று கேரள உள்துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். போலீசார் 80களில் நடந்த அந்த 3 கொலைகள் குறித்த வழக்கை மீண்டும் தூசுதட்டி எடுக்கவிருக்கிறார்கள்.
இதற்கிடையே மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எம்.எம். மணி மீது ஐபிசி பிரிவுகள் 302, 109 மற்றும் 118 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணி 3 கொலைகள் பற்றி பேசியிருந்தாலும் புதிதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.பி. ஜார்ஜ் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.