ஆகஸ்ட் 5ல் விழுப்புரத்தில் டெசோ மாநாடு: திக தலைவர் கி.வீரமணி தகவல்
வேலூர்: விழுப்புரத்தில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூரில் திராவிடர் கழகம் சார்பில் மாநில மகளிர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விழுப்புரத்தில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி (டெசோ) தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் இலங்கை இனப் பிரச்சனைக்கு தனி தமிழீழமே நிரந்தர தீர்வு என்று வலியுறுத்தப்படும். இது குறித்து திமுக தலைவர் கலைஞரோடு கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது. இலங்கை தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். அதற்காக தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாடு தமிழர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமையும் என்றார்.
இலங்கையில் தமிழீழம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் டெசோ. இதன் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.