சி.பி.எம்.க்கு ஷாக் கொடுத்த அச்சுதானந்தன்- கொல்லப்பட்ட சந்திரசேகர் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்
இடுக்கி: கேரளத்தில் பெரும் சர்ச்சையை உருவாகி யிருக்கும் புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சந்திரசேகரன் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கட்சியினர் யாரும் சந்திக்கக் கூடாது என்ற கட்சி உத்தரவை மீறி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். கட்சி உத்தரவை பகிரங்கமாக அச்சுதானந்தன் மீறியிருப்பது கேரள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். ஆனால் அவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இது மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. கட்சியின் பொதுச்செயலாளர் பினராய் விஜயன் தூண்டுதலாலேயே இந்த படுகொலை நடந்ததாக கேரள முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலர் மணியோ, மார்க்சிஸ்ட் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை படுகொலை செய்திருக்கிறோம்.. செய்வோம் என்று கூற விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய மும்முரம் காட்டி வருகிறது கேரள போலீஸ்.
இதனிடையே பினராய்விஜய்தான் தமது கணவரின் கொலைக்கு காரணமானவர் என்று சந்திரசேகர் மனைவியும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதில் கடுப்படைந்த மார்க்சிஸ்ட் கட்சி, தொண்டர்கள் யாரும் சந்திரசேரகன் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் மார்க்சிஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் சந்திரசேகரன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் அச்சுதானந்தன. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அச்சுதானந்தன் சென்றிருப்பதால் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் உள்மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.