நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில் நாராயணசாமியின் கிண்டல் பேச்சு: கொந்தளித்த நிதின் கத்காரி
டெல்லி: சர்ச்சைகளில் சிக்காத மத்திய அமைச்சர்களே இல்லை போல். நாட்டை உலுக்கியெடுத்துக் கொண்டு இருக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளால் கொந்தளித்துப் போயுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் நாட்டுக்கு ரூ1 லட்சம் கோடி இழப்பு என்கிறது தணிக்கைக் குழு அறிக்கை. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பகம் உத்தரவிட்டு இருக்கிறது. சிபிஐயும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நாராயணசாமியின் கிண்டல்
இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, சத்தீஷ்கரில் அஜய் சஞ்செட்டி என்ற மாநிலங்களவை எம்.பி நிலக்கரி சுரங்கத்தை அடிமாட்டுக்கு விலைக்குப் பெற்றுள்ளார். அஜய் சஞ்செட்டிக்கு பா.ஜ.க.தலைவர் நிதின் கத்காரி பரிந்துரை செய்திருக்க மாட்டார் என்றாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறியிருந்தார்.
கொந்தளித்த கத்காரி
இதற்கு நிதின் கத்காரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.,"சஞ்செட்டி, பெரிய தொழில் அதிபர். அவர் ஏலத்தில் பங்கேற்று காண்டிராக்டை பெற்றார். மேலும், நான் பா.ஜனதா தலைவர் ஆவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவர் நிலக்கரி சுரங்க காண்டிராக்டை பெற்று விட்டார். அதற்கு நான் எப்படி காரணமாக இருக்க முடியும்? எனக்கு தொழில் அதிபர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். நேர்மைதான் என் மூலதனம். நான் யாரைப் பார்த்தும் பயப்படுவது இல்லை. அச்சமின்றி எனது பணியை செய்து வருகிறேன். இந்த நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா? மத்திய அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அவர் உள்பட குற்றச்சாட்டு கூறிய அனைவரும் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.
நாராயணசாமி பல்டி
இதைத் தொடர்ந்து நாராயணசாமி பல்டி அடித்துவிட்டார். " நான் கூறியது தவறாக வெளியாகி உள்ளது. நான் நிதின் கத்காரி மீது குற்றம் சாட்டவில்லை. தணிக்கை அறிக்கை அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேன்" என்று கூறியிருக்கிறார்.