
கொழும்பு: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து அணுக்கதிர்வீச்சு பரவினால் அதை எச்சரிக்கும் வகையில் கருவிகளை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக .அந்நாட்டின் அணுசக்தி ஆணையத் தலைவர் ஆர்.எல். விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அணு மின் உலையின் செயல்பாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்தும் எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி 8 கருவிகள் கடலோரத்தில் அமைக்கப்படும்.இலங்கையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் கூடங்குளம் இருப்பதால் இத்தகைய எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ உள்ளோம்.
இந்தக் கருவிகள் கொழும்பு மற்றும் மேற்கு மாகாணமான கலப்பிட்டியா மற்றும் தலைமன்னார், திரிகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் நிறுவப்படும். இவை அனைத்தும் அணுசக்தி ஆணைய மைய அலுவலகங்களிலிருந்து இயக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த எச்சரிக்கைக் கருவிகள் செயல்பாட்டுக்கு வரும், அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் போது அதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க இவை உதவியாக இருக்கும்.
இந்தியாவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு இலங்கை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, அதேசமயம் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.





















