மதுரை: மதுரையில் டூவீலரில் சென்ற இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 11 பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பிலிப் கென்னடி. இவரது வீடு மதுரை கே.கே. நகர் எல்.ஐ.சி. காலனியில் உள்ளது. இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடியும், அவரது மனைவி விசுவாசமணியும் பெத்தானியாபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு தனித்தனியாக இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்தனர்.
அப்போது, கோரிப்பாளையம் சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடியின் செல்போனில் அழைப்பு வந்தது, எடுத்து பேசியபோது மறுமுனையில் இருந்தவர் உறவினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். இதை கவனிக்காமல் சென்று கொண்டிருந்த மனைவி விசுவாசமணியிடம் சட்டக் கல்லூரி எதிரில் மர்ம நபர்கள் இருவர் அவரது கழுத்தில் இருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு மாயமாக மறைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










