ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியம்- தேர்வு எழுத முடியாமல் போன ஆயிரக்கணக்கானோர் குமுறல்
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் தேர்வு வாரியம் சரியான ஏற்பாடுகளை செய்யாததால் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்துத் தேர்வு நடத்தியது.
இந்த தேர்வு எழுத ஒரு லட்சத்து 54,133 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்கள் பட்டியல், ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது, அதன்படி கடந்த 27ந் தேதி 389 தேர்வு மையத்தில் போட்டியாளர்கள் தேர்வு எழுதினர்..
தேர்வு எழுதும் ஒவ்வொருவரிடமும் ரூ 500வீதம் ரூ7.5 கோடி வசூல் செய்த தேர்வு வாரியம், அவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளை முறையாக தபாலில் அனுப்பவில்லை என்பது புகார்.
அத்துடன் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம் என்றும் அறிவித்தோடு, அதற்கு ஒப்புதல் பெற தகுதியானவர்களிடம் சான்று கையெழுத்து பெற்று வர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதுதான் பலரையும் அலைகழித்திருக்கிறது. கடைசி நேரத்தில், இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்தவர்கள் , சான்று கையெழுத்துக்காக அலைய நேரிட்டது. கையெழுத்து வாங்க முடியாதோர் தேர்வு எழுத முடியவில்லை. இப்படி தேர்வு எழுதமுடியாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 11,832 என கூறப்படுகின்றது.
மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட தேர்வில் தேர்வு வாரியம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டாமா? என்பதே தேர்வு எழுத முடியாதோரின் ஆதங்கம்.