நெல்லையில் ராமசந்திரா மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம்
தென்காசி: நெல்லையில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடத்தும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நாளை முதல் 11ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
டெங்கு காய்ச்சலால் தென்மாவட்டங்களில் 53 பேர் பலியாகியுள்ளனர். பலியானோரில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் தான் அதிகம். கடந்த 12ம் தேதி டெங்கு என்னும் உயிர் கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் அரசு மருத்துவமனையுடன், தனியார் மருத்துவ நிறுவனங்களும் இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க முன்வரத் தொடங்கின.
தமிழகத்தில் பிரபலமான சென்னை ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர் மற்றும் கடையநல்லூரில் நாளை (9ம் தேதி) முதல் வரும் 11ம் தேதி வரை 3 நாட்கள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச சிகிச்சை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை ஆலங்குளம், நாடார் மாகஜான மண்டபத்திலும், 10ம் தேதி கடையநல்லூர் அரசு பெண்கள் பள்ளியிலும், 11ம் தேதி கடையம் மரகதம் பீம்சிங் திருமண மண்டபத்திலும் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடக்கிறது.
முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் சார் நோய்கள், குழந்தைகள் நலம், இருதயம், தோல் மருத்துவம், முடநீக்கியல், காது, மூக்கு, தொண்டை மற்றும் சிறுநீரகத்துறை மருத்துவர்கள் ஆலோசனை அளிக்கின்றனர். குறிப்பாக அடிப்படை ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஆல்ட்ரா சவுண்ட், இசிஜி மற்றும் எக்கோ ஆகியவை இலவசமாக செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட சில மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், மருத்துவ சிகிச்சை சம்பந்தமான அனைத்து கோப்புகளையும் நோயாளிகள் எடுத்து வந்து முகாமில் பயன் பெறலாம் என்றும் ராமசந்திரா மருத்துவ்மனை டாக்டர் வெங்கடாச்சலம், டாக்டர் சவுந்திரராஜன், டாக்டர் வைத்தி சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவித்தனர்.