நாகை அருகே ரூ.1 கோடி வீட்டை அபகரித்த பாஜக நிர்வாகி கைது
நாகப்பட்டினம்: போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்த பாஜக நிர்வாகி புகழேந்தியை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (38). ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அவர் தனக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி (52) என்பவர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துக் கொண்டதாக கடந்த 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் புகழேந்தி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த புகழேந்தியின் மகன்கள் ரகுராமன், சிவராமன், புகழேந்தியின் நண்பர் கீவளூரைச் சேர்ந்த தினேஷ்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் புகழேந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.