மயிலாடுதுறை: தலைமறைவாகி விட்ட நித்தியானந்தாவால் மதுரை ஆதீனத்தின் புகழுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளர் அழகிரிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நித்தியானந்தாவை அம்மாநில போலீசார் தேடி வருகின்றனர். நிச்சயமாக அவர் கைது செய்யப்படுவார் அப்படி கைது செய்யப்பட்டால், மதுரை ஆதின மடத்துக்கு களங்கம் உண்டாகும்.
ஏற்கனவே ஒரு வழக்கில் சிக்கியிருந்த காரணத்தினால், கைது செய்யப்படுவதற்கு முன்பாக குமரேசன் என்ற இளைய பட்டமாக திருவாவடுதுறை ஆதினத்தில் இருந்தவரை திருவாவடுதுறை ஆதினம் நீக்கியிருக்கிறது. அதேபோல திருவாவடுதுறை ஆதீனத்தை பின்பற்றி, ஒரு மரபு வாய்ந்த மதுரை ஆதீனத்தினுடைய இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டுள்ள நித்தியானந்தாவை உடனடியாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நீக்கம் செய்ய வேண்டும்.
நித்தியானந்தா தலைமறைவாகி உள்ளது, மதுரை ஆதின புகழுக்கே களங்கம் உண்டாக்கும் செயல் என்றார் அழகிரிசாமி.


















